Monday 17 May 2021

உணர்வுசார்ந்த நுண்ணறிவு.

ஏழ்மை மிகுந்த ஓரூரில்  கருணையுள்ள செல்வந்தர் வறிய  சிறுவர்க்குசத்துணவு கிடைக்க வேண்டும் எனும் நல்லெண்ணத்தில்ஆலயத்தரிசனத்தின் பிற்பாடு மோதகம் வழங்கி வந்தார்.


வரிசையில் நின்று அவரவரே எடுத்துச் செல்ல வழி சமைத்தார்

திரண்ட பெரிய பாகம் எடுக்குமெண்ணத்தில்  வரிசை முந்த சிறுவர்க்கிடையே பெரும் சமர் நிகழ்வதை அவதானித்தார்.


ஒரு சிறுவன் பண்பாகவே திகழ்வான்அதனால் தினமும்  வரிசையிற் கடைசியே!


உள்ளீடு குறைந்த சிறு மோதகமே எஞ்சியிருக்கும்இருப்பினும் மனமார அப்பெரியவருக்கு நன்றி தெரிவித்துப் பெற்றுச்செல்வான்.


அப்பெரியவர்க்கும் அப்பண்பான சிறுவனுக்கு மேலும் பரிசளிக்க வேண்டுமென்ற எண்ணம் உதித்ததுஅதே நேரம் மற்றையசிறுவர்க்கும் நற்சிந்தனை

 புகட்டவேண்டும் என்றெண்ணினார்.


ஒர் நாள் உள்ளீட்டிற் கீடாக தங்கக் காசினை வைத்து மோதகம் ஒன்றைத் தயார் பண்ணுவித்தார்.


அன்றும் அவ்வாறே சிறுவர்கள் வரிசை மாறி அடிபட்டு மோதகம் எடுத்துச் சென்றனர்.


அச்சிறுவனும் எஞ்சிய அச்சப்பை மோதகத்தைப் பெற்று நன்றி தெரிவித்து வீட்டிற்கு எடுத்துச் சென்றான்


சென்ற வேகத்திற் திரும்பி ஓடி வந்து அவ்வுபகாரியிடம் “ நீங்கள் எனக்குவந்த மோதகத்தினுள் இத்தங்க நாணயம் இருந்தது” எனக் கூறித் திருப்பி ஒப்படைக்க முயன்றான்.


“அது உனக்கான என் சிறு பரிசு, உன் பொறுமையை அவதானித்து வியந்து நானே அதை மோதகத்தினுள் வைப்பித்தேன்” எனக் கூறினார்.


சிறு வயதில் நான் கேட்ட கதையே மேற் கூறியது.


கீழே விபரிப்பது உண்மை நிகழ்வு.



1960 களில் பாலர் வகுப்பிற் படிக்கும் மாணவர்களின் முன்னே மேசைகளில் தட்டில் இனிப்புப் பண்டத்தை (Marshmallows) ஆய்வாளர் ஒருவர் வைத்து “ விரும்பினால் நீங்கள் இப்பவே சாப்பிடலாம்அற்றேல் சற்று நேரத்தில் நான் ஓப்புதல் தரும்வரைகாத்திருந்தும் உண்ணலாம்” எனக் கூறினார்.


அம்மாணவர்களை பல தசாப்தங்கள் அவதானித்து தனது அறிக்கையைச் சமர்ப்பித்தார்.


அவ்வாய்வின்படி  படிப்பிற் கெட்டிக்கார மாணவரை 

விட மனக்கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமான மாணவர்கள் நல்ல பதவிகளிலும் பணக்காரர்களாகவும் இருப்பது தெரிய வந்தது.


ஒருவரின் நுண்ணறிவாற்றலை விட மனக்கட்டுப்பாடே (பொருள்சார்வாழ்வில் உயர்வுதரும்.


“பொறுத்தார் பூமி ஆள்வார்”


Wednesday 31 March 2021

வைத்தாய் பெண்ணை

 சபையிலே சமயம் பேசுகிறவர்கள் சமய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாறுபாடு நேராமற் பேச வேண்டும்

வேறு பேச்சுக்களிற் போலச் சபையை மகிழ்வித்து வசீகரிக்கப்  பொருந்தாதன கூறுதலாகாதுகூறின்குளிக்க வந்தகேட்போர்கள் சேறு பூசிக்கொண்டவர்களாவர்கள்.


நான் கற்பித்த வித்தியாலயத்தின் சைவமன்ற மாணவர்கள் ஒருமுறைசுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூசையிற் பேசுவதற்குபேச்சாளர் ஒருவரை அழைத்திருந்தனர்அவ்விழாவுக்கு நான் தலைமை வகித்தேன்.


பேச்சாளர் ‘பித்தா பிறைசூடி’ என்ற தேவாரத்துக்கு நயம்பட உரை கூறினார்அவர் அத்தேவாரத்தைபித்தாபிறைசூடிபெருமானேஅருளாளாஎத்தால்மறவாதேநினைக்கின்றேன்மனத்துன்னைவைத்தாய் பெண்ணைதென்பால் வெண்ணெய்நல்லூரருட்டுறையுளத்தாஉனக்காளாய் இனி அல்லேன் எனலாமே எனப் பிரித்துக்கொண்டு ‘வைத்தாய் பெண்ணை’ என்பதற்குநீ உமாதேவியாரை இடப்பாகத்தில் வைத் திருக்கிறாய் என்று பொருள் கூறிஅப்படிப்பட்ட நீஎன்னை விவாகம்செய்யாது தடுக்கலாமாதனக்கொரு நீதி பிறர்க்கொரு நீதியாஎன்று நயமும் உரைத்தார்எனக்குத் திகைப்பாக இருந்தது.


ஒருவரைப் பேச அழைத்து அவரை எம்மிடத்தில் வைத்துக் கண்டிப்பது அழகன்றுகண்டியாது விடின் அக்கருத்தை நாமும்ஏற்றுக் கொண்டதாக முடியும்.

மாணவரும் பிழையாக விளங்கிக் கொள்வார்கள் என்பனவற்றை எண்ணி தலைவர்முடிவுரையிலே பின்வருமாறு சுருக்கமாகக்கூறினேன்.


சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமானை, ‘பித்தா பிறை சூடி’ என்ற தேவாரத்தில் ஆறுமுறை அழைக்கின்றார்கள்அழைத்துஉனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே எனப் பணிந்துரைக்கின்றார் என்று கூறிஅத்தேவாரத்தை பித்தாபிறைசூடிபெருமானேஅருளாளாஎத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள் அத்தாஉனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமேஎனப் பிரித்துக் காட்டிஅதில்பெண்ணை என்பதுஒரு நதியின் பெயர்; ‘’ உருபேற்ற பெண் எனுஞ் சொல்லன்று என விளக்கினேன்.


சிவனும் ஆன்மாக்களும் நித்திய வஸ்துக்கள்சிவன் எப்பொழுதும் ஆண்டான்ஆன்மாக்கள் எப்பொழுதும் அடிமைகள்மோட்சத்திற்கூட’ என்னுங் கருத்துக்கள், ‘உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே’ என்பதில் அடங்கியிருக்கின்றன.


பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா

எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை

வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

அத்தாவுனக் காளாயினி அல்லேனென லாமே.


சைவநீதி’ ஈசுர ஐப்பசிகார்த்திகை 1997, பக்கம்- 2


பி.கு-

திருவெண்ணெய் நல்லூரிலுள்ள திருவருட்டுறை ஆலயம்.


இவ்வாலயத் தீர்த்தமே தென் பெண்ணையாறு.


இங்கே தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும்:


‘ உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே’ என்கின்றார்.


கருத்து

உமக்கு முன்பே அடியவன் இனி இல்லையென்று கூறலாமோ!


சைவ சித்தாந்த சாத்திரங்களுள் முதன்மையான ‘சிவஞானபோதம்’ அருளிய மெய்கண்டதேவர் ஞானம் பெற்ற திருத்தலம்என்பதும்  சிறப்பே!

Monday 29 March 2021

எங்குருவின் இணையடிகள் ஏத்தி வாழ்வாம்

 புன்னைநகர் வாழ்கின்ற பூசுரர்கள் தம்மரபிற்

   புனித ரான

சின்னையர் புரிதவத்தின் பயனாக அவதரித்த

   சேயாய் நல்லூர்

மன்னியபொன் னம்பலப்பேர் வித்வசிரோ மணிதனக்கும்

   வளமை சாலும்

சுன்னைவரு புலவர்மணி குமாரசுவா மிப்பிள்ளைத்

   தூயோனுக்கும்


நன்றியறி மாணவனாய் நற்றமிழும் வடமொழியும்

   நவின்ற நூல்கள்

தொன்றுதொடு வரன்முறையிற் றுகளறவாய்ந் தருள்நூலின்

   தொகையு மோதிக்

குன்றனைய திறனுடைய குருவாகி மாணவருட்

   கோட்ட நீக்கித்

துன்றுமதி மதிவித்வ சிரோமணியென் றுலகுபுகழ்

   சொல்ல நின்றான்.


தொல்காப் பியமுனிவன் சொன்னூலின் றுகடீர்த்துத்

   தூய்மை கண்டான்

வெல்காப் பியமான ராமவ தாரவியல்

   விளங்கச் செய்தான்

ஒல்காப் பொருளிரகு வமிசத்துக் கோரரிய

   உரையுங் கண்டான்

அல்காப் புகழகத்தின் முற்பகுதிக் கரியவுரை

   ஆக்கித் தந்தான்.


ஆறாகு வதனியல்பும் ஆகுபெய ரிலக்கணமும்

   முதலா ஆன்றோர்

வேறாக வுரைகண்ட பலவரிய விலக்கணத்தின்

   மெய்ம்மை நாடிப்

பாறாமை நிலைநாட்டிப் பண்டிதர்கள் முடிமணியாய்ப்

   பகர வாழ்ந்தான்

நீறாடி முதற்பிள்ளை நீங்காது தங்கநெகிழ்

   நெஞ்சந் தந்தான்.


தாமரையி னிலைநீர்போற் றாங்குலக பற்றின்றித்

   தவவாழ் வுற்று

மாமறைசொன் முதற்பொருளாம் மகேசுவரன் மலரடியே

   பற்றா மன்னிச்

சேமமுற வவ்வடிக்கட் சென்றடைந்தான் எங்குருவாய்த்

   திகழ்ந்து நின்ற

ஏமமுறு கணேசையன் இணையடியுள் ளிடையிருத்தி

   ஏத்தி வாழ்வாம்.


கணேசையர் நினைவுமலர், ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம்

குரும்பசிட்டி, தெல்லிப்பழை. 1960 

பக்கம் 322-323

Thursday 11 March 2021

நகுலேசர் திருவந்தாதி

 சங்கார் கரனயன் காணா நகுலா காணா சலமுதன்மேற்

பொங்கா தரத்தொடோர் அந்தாதி பாடியான் போற்றுதற்கு

மங்கா வளமார் வருத்தலைக் கண்மா மருதடியைத்

தங்கா லயமெனக் கொள்ளைங் கரத்தன் தருந்துணையே.


பூவா ரடிநகு லானனன் போற்றிப் புகழ்ந்துநித

மோவா தொழுகு மருவிநீ ராடி யுழைந்திடலு

மாவா வெனவரு ளான்முக மாற்று மவனிருக்கப்

போவா ரெவர்பிற தெய்வத்தை நாடிப் புறம்புறமே.  1


புறந்தருந் தன்கழல் போற்றுகின் றாரைப் பொருவரிய

அறந்தரு மர்த்தத் தொடுகல்வி யின்ப மளித்தருளும்

இறந்தருந் தீநர கெய்தாமை நல்கு மிமையவட்கோர்

புறந்தருஞ் சீர்நகு லாசலம் மேவிய புண்ணியனே.  2

புண்ணிய முன்னென்ன செய்தன மோவிப் புவிபரக்க

நண்ணிய தூயநற் றீர்த்தம தாடி நகுலமலை

யண்ணிய வண்ணலைத் தன்னிடம் மேவிய அம்மையொடும் 

பண்ணிய னற்றமி ழாற்றுதி பாடிப் பணிவதற்கே.  3


பணியா தெனவரி பங்கய னாதிப் பகவர்தனைப்

பணியா யெனநிதம் வேண்டினர் நிற்கப் பதைத்துருகிப்

பணியா பரணகண் பாரென வேண்டுமிப் பாரினரை

யணியா தரத்தி னருளுவ னானகு லாசனனே. 4


சலமில னாயினுந் தன்னினை வார்க்கித் தரணியின்கண்

இலமில மென்றுநை யாவகை யாவு மினிதளித்துச்

சலமில ராக்கிமெய்ஞ் ஞானம் பெறத்தடை தந்துநின்ற 

மலமில ராக்கும் நகுல மலையுறை வானவனே.5


வானம் வளிதீ புனல்மண் கதிரிய மானனிந்தைத்

தானங் கமாக்கி யகிலாண்ட மெங்குந் தரித்தவற்றை

யானந் தமாக வசைத்தவற் றுக்குவே றாகியுமெய்ஞ்

ஞானந் தவாநகு லேசனின் றாடுவன் நம்பொருட்டே.  6


பொருளைப் புகழினைப் பூவைய ரின்பினைப் போற்றிசெயு 

மிருளைப் புறங்கண் டியாமுனை நெஞ்சி லிருத்துதற்குன்

னருளைப் பெறுவதெந் நாளென்ன வேங்கி யலமந்தனந் 

தெருளைப் புரிதவர் சேர்நகு லாசலச் செவ்வண்ணனே.  7


வண்ணப் பிறைநதி யாடர வஞ்சேர் மணிச்சடையு

மெண்ணத் தகுநீ றணிமெய்யு மாரரு ளேய்கண்களும்

மண்ணப் படுமணி யன்னபொற் கண்டமும் வாய்ந்தெமுளம்

நண்ணப் புகும்நகு லாசலம் மேவிய நாயகனே.  8


நாயகன் தன்னிட மேவிய நங்கைக்கு நாம்புரிந்த 

தீயகன் மம்மெலாந் தீய்ந்திடச் செய்யுந் திறலுடையான்

போயகன் மேருவில் லாற்புர மூன்றும் பொடிசெய்தவன்

பாயகன் மாநகு லாசலன் சூலப் படைக்கரனே.9


படைப்பவன் பார்முத லண்டங்க ளெல்லாம் பரிந்தளித்துத் 

துடைப்பவன் தீவினை யாளரைத் துன்பங்கள் சூழ்நரகி 

லடைப்பவன் தான்சொலும் நூனெறி நின்றா ரருவினைக 

ளுடைப்பவன் தொன்னகு லாசலம் மேவி யுறையரனே.  10


Tuesday 9 March 2021

மாவைக் கந்தன் பதிகம் பாடல்கள்: 3-4

 தேமதுர மேவுதமி ழாய்புலவ னாகிவரு

     தேசிகசி காமணிசிவன்

சீடனெனு மாறமர வோமெனும காமறையி

     னேருபொரு டேரவருளும்

சாமிகட மாமுனிவ னோடருணை நாதனடி

     சாரவுயர் ஞானமுதவும்

தாதவர னோடெதிர்பு வாதமிடு கீரனுயர்

     தாழ்விரைவி லோர்குகையிலே

யேமமுற வேசிறைசெய் பூதமத னான்மறுகி

     யீகருணை நீயெனவுனை

யீரடிப ராவியொரு பாநுவல வேவியயி

     லேமமவ னேயவருள்செய்

வாமைமக யாமுமுன தீரடிப ராவுவமெ

     மாயவினை மாயவருள்வாய்

மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு

     மாவைநகர் வாழ்முருகனே.  3


வானமழை யீயவுழல் வாயுவெழ மேதினியில்

     வாழுமுயிர் ஊண்முதலிய

வாழ்வுமுத லானபெற வேதுவென வோதிரவி

     மாகரிய வாழியின்மிசை

ஞானமறை யோர்கள்துதி யோதவுயிர் யாவுமெழி

     னாடியிசை பாடிமகிழ

நாடுகுண மாதியிசை னீடுமொளி யோடுமுற

     னாட வெழின் மாமயிலிலே

பானுமுத லானகதிர் யாவுமளி மூலமெனும்

     பான்மைதிகழ் பேரொளியுடன்

பாலருகி லேதவர்முன் னாரருள்கொ டேகியருள்

     பாலசிகி வாகனவுனை

மானசம தாகவழி பாடுபுரி சோமருள

     வாகனக சோதிவடிவாய்

மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு

     மாவைநகர் வாழ்முருகனே.  4



Monday 8 March 2021

மாவைக் கந்தன் பதிகம்

 மன்னுந் திருமாவை வாழ்வுகந்த கந்தனடி

உன்னி ஒருபதிகம் யானோத-மின்னுமணிப்

பையரவஞ் சூடுசடைப் பண்ணவன்முற் றந்தவைந்து

கையனடித் தாமரையே காப்பு.


தேவரர்சிர மீதுதன தீரடிகள் சூடிமிகு

     சீர்புகழ வார்வமுடனே

சேவைபுரி வோர்கள்சுர தாதியர்க ணேசமொடு

     தேனினிசை பாடியினிதாய்

மேவிநட மாடவது நாடிமகிழ் வோடுறையு

     மேலமரர் கோமகளெனும்

மேதகுதெய் வானையோடு மானுதவு மேர்கொளிள

     வேடர்மக டானுமுறவாய்

ஆவியென மேவியிரு பாலுமுனை நாடிமகிழ்

     வாயமர ஞானவடிவே 

லாயுதமின் வீசியுன தோர்கரம தாகவுற

     வாடுமயின் மீதுவருவாய்

மாவலிய மேதிமிசை பாசமுட னாடியெமை

     மாமறலி யோடிவருநாள்

மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு

     மாவைநகர் வாழ்முருகனே.  1


ஆறுதலை வேயுமிறை சூரனெனு மாவவுண

    னாதியரி னாறுயலிழந் 

தாறுதலை நாடிவரு மான்முதல வானவர்க

     ளாறுதலை மேவுதலுற

ஆறுதலை மேவிமுக மாறினடு வாநயன

     மாறினுறு மாறுபொறிதந் 

தாறுகுண மாறுமுக மாகவிழி தோள்செவியி

     ராறுகொள வேயருள்செய

ஆறனைய ராதரவி னோடுபய மீயவுமை

     வாயுமிக வாதரமுற

ஆறுவன மாயமுறை யோதுநரை யாளுமிறை

     யாகிவல சூரன்முதலா

மாறுபடு வோரழிய வேலைவிடு வாயெமது

     மாதுயரு மோயவருள்வாய்

மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு

     மாவைநகர் வாழ்முருகனே.  2


Thursday 4 March 2021

சந்நிதிக் கந்தர் சதகம் 91-100

 உனது கரமீ துளது வடிவேல்

தனது ருவுபோ தமெனி னதனை 

எனது ளிருளோ டியற விடுவாய்

வனச ரபதி மதிம ருகனே.  91


மருக திருமால் மகவு பெருமான்

அருவ உருவா யணுவி லுயிராய்

வருகு மரசந் நிதியி லுறைவாய்

தருக நினதாள் தமில்நி ழலதே.  92


நிழலில் வறுங்கோ டையில்நீர் நிலையென்

றழல்கா னலைவேட்  டலைமா னெனநான்

உழல்வேன் அலையா தருள்நீர் உதவிக்

கழலீந் தருள்சங் கரிபா லகனே.  93


பாலன் குமரன் பதறுங் கிழவன்

மாலன் மருகன் மயிலன் மலையன்

வேலன் விமலன் விபுதன் விறலன்

பாலன் பினர்துன் பமிலின் பினரே.  94


இன்பத் தமிழின் இசைபா தருநே

சன்சற் குமர குருதா சனின்மீ 

தன்புற் றடிஞா னமளித் தவமெம்

புன்சொற் செவியுட் புகுமோ தகவே.  95


தகவார் சிறுவர் தமொடா டியவர்

அகமே விமணால் அமைபிட் டதுண

மிகவா வியவந் ததுவாக் குதலம்

குகசந் நிதியோ குடியே றிடனே.  96


இடர்னார்ந் தெழுபூ வரசில் எழில்கொள்

மடனார் இளைஞ ரொடுபல் வடிவாய்

உடனா டியசந் நிதியுன் உறைவோ

நடனா டிடுகே கயமேல் நடனே.  97


நடனா டிமகன் நமொடா டிடுமென்

றெடுகா வடியர்க் கிடையா டிடுவான்

கெடவூ னநடம் கிளர்ஞா னநடம்

எடுசேய் நடனா டடிநா டகமே.  98


அகமோ நிலையில் உலகில் அலைய

மிகவாய் துதிபா டிடிலென் விளையும்

சகமீ துனையெத் தருணந் தனிலும்

குகநான் மறவா மையருள் குருவே.  99


குருவே வருக குமரா வருக

திருவே வருக சிவசேய் வருக

முருகா வருக முதலே வருக

வருக வருக வனசெம் மலையே.  100


வேலும் மயிலும் துணை.


கட்டுவனூர் திரு க. சின்னப்பு அவர்களாற் பதிப்பிக்கப் பட்டது. பிரமாதீச கார்த்திகை 1973.